Main Menu

வெனிஸ் நகருக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆண்டுக்கு 3 கோடி பேர் அங்கு செல்கின்றனர்.

இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த முறையே 32, 35 வயதான சுற்றுலா பயணிகள் ஜோடி, கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தது.

அந்த ஜோடியினர், அங்குள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்துக்கொண்டிருந்தனர். இப்படி பொது இடத்தில் நடந்து கொள்வது அங்கு குற்றம் ஆகும்.

இதை பார்த்த சிலர் அங்குள்ள மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

உடனே அவர்களை பிடித்து அதிகாரிகள் 853 பவுண்ட் அபராதம் (சுமார் ரூ.75 ஆயிரம்) விதித்தனர். அத்துடன் அவர்களை உடனடியாக அந்த நகரில் இருந்தும் வெளியேற்றினர்.

பகிரவும்...