Main Menu

விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது..

1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம்  குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற்கும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளிற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏப்பிரல் மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்திருந்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் அமைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர் என தெரிவித்திருந்தது.

இது குறித்து இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

சுவிசின் குற்றவியல் கோவையின் 260 வது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது,அதன் பின்னர் அல்ஹைதா போன்ற அமைப்புகளிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...