Main Menu

விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் நாங்கள் ஜனாதிபதிக்கு கூறமுடியும் ; எம்.கே.சிவாஜிலிங்கம்

ஜனாதிபதிக்கு விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் அந்த வரலாற்றை நாங்கள் கூறமுடியும் இதனை விடுத்து தேவையற்ற கதைகளை கதைக்காது மீதமாகவுள்ள காலத்தில் வாக்களித்த மக்களுக்கு பயனுள்ளதாக எதையாவது செய்யவேண்டும் என  எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர்த்து வேறு எங்காவது ஒரு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எவராவது அல்லது விடுதலைப்புலிகளது பொருட்களைக் கொண்டுவந்தார்கள் என்று யாராவது ஒருவர் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்வங்கள் ஏதாவது இடம்பெறதுண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுடன் பிரபாகரனுக்கும் தொடர்புள்ளது என ஜனாதிபதி கூறியமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுப் பகுதிகளில் எவராவது போதைப்பொருள் கடத்தினார் என்று கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படுவது தொடர்பில் யாவரும் அறிந்ததே 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து காலப்பகுதியில் வெளிநாடுகளின் தொடர்புகள் கடல் மார்க்கமாக வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தான் கப்பல்கள் மூலமான கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இது அந்த மக்களின் பொருளாதாரமாகவே இருந்தது. அத்தகைய நடைமுறைகளில் ஈடுபட்டவர்களின் உதவியுடன் தான் விடுதலைப்போராட்ட இயக்க வீரர்கள் இந்தியாவிற்கு சென்று வந்தார்கள். இந்த நிலைமை 1983 ஆம் ஆண்டு வரை நீடித்தது. 1983 பின்னர் தான் இயக்கங்கள் சொந்தமாக படகுகளை வைத்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக நிறுத்தியதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியாமல் இருந்தால் நாங்கள் தெரியப்படுத்த விரும்புகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தான் கஞ்சா க்கடத்தல்கள் போதைப்பொருள் கடத்தல்கள் நடைபெற்று வருகின்றது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் எந்த கடத்தல் நடவடிக்கைகளையும் அனுமதித்தது இல்லை கடுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள் . விடுதலைப்புலிகளின் காலத்தில் உள்நாட்டிலே அல்லது சர்வதேசத்திலே எந்தவொரு விடுதலைப்புலி உறுப்பினரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை. 

இந்தப் பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தான் வெல்லாவிட்டால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச என்னை ஆறடி மண்ணுக்குள் தள்ளியிருப்பார் என்று கூறியவர் ஒக்ரோபர் புரட்சி என அழைக்கப்படும் சதிப்புரட்சியில் ஆறடி மண்ணுக்குள் தள்ளியிருப்பார் எனக் கூறியவருக்கு பிரதமர் பதவியை வழங்கி இந்த நாட்டுமக்கள் வழங்கிய ஆணையை அதாவது நல்லாட்சியை குறிப்பாக நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்த பெருமைக்குரியவராக இருக்கின்ற ஜனாதிபதி மீதமாகவுள்ள காலத்திலாவது எதையாவது செய்வதற்கு சிந்திக்கவேண்டும். 

மீதமாகவுள்ள காலத்தில் எதுவுமே நடைபெறாது என்ற ஒரு எண்ணப்பாடே உருவாகியுள்ளது. எனினும் காணிப்பிரச்சினை அரசியல் கைதிகள் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என்பதையாவது கண்டுபிடிப்பதற்கு ஏற்ற செய்யக்கூடிய விடையங்களை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை மதிக்க வேண்டும் அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதா இல்லையா என்கின்ற , யாரை நம்புவது என்கின்ற விரக்தியில் இருக்கின்றார்கள். அத்தகைய விரக்தியில் இருக்கும் மக்களுக்கு அதகைப்போக்குவதற்கு மிகுதமாகவுள்ள காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் 

இதனை விடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறி பிரச்சினைகளை உருவாக்காது வாக்களித்த மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

பகிரவும்...