Main Menu

விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார்- சிவி சண்முகம்

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் முக ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. நேரடியாக களம் காண்கிறது. அ.தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. ஆதரவு அளித்துள்ளது. இதையொட்டி தே.மு.தி.க. சார்பில் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கஞ்சனூரில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வெற்றி பெற்று விட்டது. மக்கள் தாங்கள் செய்த தவறை தற்போது உணர்ந்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். இந்த தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். நம்முடைய கூட்டணி வலுவான கூட்டணி. 2021-ல் நம்முடைய கூட்டணி மீண்டும் தமிழகத்தை ஆளப்போகிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் அச்சாரம். இத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது மட்டுமின்றி தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

நவம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அந்த தேர்தலிலும் நமது கூட்டணி தொடரும். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதே உற்சாகத்துடன் உள்ளாட்சி தேர்தலிலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம். உங்கள் சக்தியை நீங்கள் உணருங்கள், சோர்வை விலக்குங்கள்.

கடந்த 2011-ல் நடந்த தேர்தலில் இந்த ஆட்சி அமைய அடித்தளமிட்டது தே.மு.தி.க.தான். அந்த நன்றியை நாங்கள் மறந்து விடவில்லை. எங்கேயும், எந்த இடத்திலும் உங்கள் தலைவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் பேசியது கிடையாது.

தி.மு.க.வை போன்று, ஸ்டாலினை போன்று அ.தி.மு.க.வினர் தரம்கெட்டவர்கள் அல்ல. ஸ்டாலினை போன்று நன்றி கெட்டவர்கள் நாங்கள் அல்ல.

விஜயகாந்த் சிறந்த உழைப்பாளி. அவர் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போயிருப்பார். இந்த இடைத்தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை தவற விட்டால் தமிழகத்தின் அழிவுக்கு நாமே இடம் கொடுத்து விட்டதாகும்.

இதில் நாம் வெற்றி பெறாவிட்டால் வருகிற உள்ளாட்சி தேர்தல், அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை நாம் சந்திக்க வேண்டியதுவரும்.

எனவே தொண்டர்களும், பாட்டாளிகளும் நிறைந்த கூட்டணி இந்த கூட்டணி. எங்களை யாராலும் பிரிக்க முடியாது. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...