அனைத்து சவால்களையும் முறியடித்து தேர்தலில் வெற்றிபெறுவேன் – கோத்தாபய
ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் இன்று பாரிய அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார்கள். அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெறுவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா மாஜன கட்சியின் தேசிய மாநாடு நேற்று குருநாகல் நகரில் இடம் பெற்றது . இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இடம் பெற்ற தொழிற்சங்கத்தினதும், சிவில் அமைப்புக்களினதும் தேசிய மாநாடுகளில் கையளிக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் எமது ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
தேசிய பாதுகாப்பு , தேசிய பொருளாதாரம் இரண்டும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானதாகும். ஆனால் எமது நாட்டில் இவ்விரண்டு விடயங்களும் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. அரசியல் பழிவாங்கல், இராணுவத்தினர் பழிவாங்கல் உள்ளிட்ட தேவையற்ற காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையினால் தேசிய பாதுகாப்பு வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டது.
பொலிஸ்தரப்பினர் தொடர்பில் இன்று சமூகத்தின் மத்தியில் பல மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. பொலிஸாரின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தின் முன்னெடுத்த செயற்திட்டங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காக நிறுத்தப்பட்டது. எமது ஆட்சியில் மீண்டும் பொலிஸ் தரப்பினரது அடிப்படை பிரச்சினை, பதவி உயர்வு ஆகியவற்றிற்கு முறையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
பொருளாதார நெருக்கடிகளை எதிர்க் கொண்ட நிலையிலேயே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் 3 இலட்சம் இராணுவ வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதன் காரணமாகவே 30 வருட கால யுத்தம் குறுகிய காலத்திற்குள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
தேசிய பரீட்சைகளில் வெற்றிக் கொண்டால் மாத்திரம் எதிர்காலம் என்பது கிடையாது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களின் வாழ்க்கையினை முன்னேற்றும் திட்டங்கள் ஆட்சிக்கு வந்து முதல் காலாண்டுக்குள் செயற்படுத்தப்படும். உயர்கல்வியினை பெற்றுக் கொண்டால் மாத்திரமே சர்வதேசத்தை வெற்றிக் கொள்ள முடியும். இதற்கான செயற்திட்டங்களையும் எவ்வித வேறுப்பாடுகளும் இன்றி பெற்றுக் கொடுக்கப்படும்.
சிவில் யுத்தத்தின் காரணமாக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய முடியாமல் போனது. யுத்தத்தை வெற்றிக் கொண்டு குறுகிய காலத்திற்குள் அபிவிருத்திகளை செய்தோம். எவரும் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் எவ்வித கொள்கைகளையும், முறையான திட்டங்களும் இன்றி ஆட்சிக்கு வந்தமையினாலே பொருளாதாரத்தை முன்னேற்ற முடியவில்லை.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அதிகாரத்தை பிரயோகித்து எதிர் தரப்பினரை பழிவாங்கியதால் தேசிய பொருளாதாரம் உட்பட தேசிய பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட முடியாதவர்கள். இன்று பல சூழ்ச்சிகளை பிரயோகித்து நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளார்கள். தோன்றியுள்ள அனைத்து சவால்களையும் எதிர்க் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவேன்.என்றார்.