Main Menu

விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் குறித்து 2 நாளில் அறிவிப்பு வரும் – பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என பிரேமலதா தெரிவித்தார்.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. 40 தொகுதிகளையும் வென்று எடுப்போம். கடைசியாக வடசென்னையில் பிரசாரத்தை முடிப்போம்.

கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு. உறுதியாக 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வருமான வரி சோதனை உள்பட பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சட்டம் தனது கடமையை செய்யும். எதிர்க்கட்சிகள் என்பதால் சோதனைகள் மூலம் யாரையும் பழிவாங்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது.

என்னுடைய பிரசாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இல்லாததால் எல்லோரும் என்னுடைய பிரசாரத்தை கவனிப்பதால் அவருடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

கடந்த காலத்தில் நடந்த பிரசாரங்களும் இதுபோல்தான் இருந்தன. எனக்கு என்று ஒரு பாணி உள்ளது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். இன்னும் 2 நாளில் அதற்கான அறிவிப்பு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...