Main Menu

சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் – சுமந்திரன்

வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர். எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை’ என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு வடமராட்சி மாலுசந்திப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்தது.

அந்தக் கலந்துரையாடலில் அப்போதும் எம்முடன் இணைந்திருந்த கஜேந்திரகுமார், பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

எனினும் மறுநாள் கஜேந்திரனுக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் வேண்டும் என கோரினார். இந்த ஆசன பங்கீட்டில் அவர்களுக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் வெளியேறினார். மற்றபடி அவர்களுக்கு ஒரு கொள்கையும் இருக்கவில்லை. அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய கஜேந்திரகுமாரினால் ஒரு தடவை கூட நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல முடியாமல் இருக்கின்றது.

அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனக்கு  தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமையால் வெளியேறினார். தேர்தல் முடிந்தவுடன் நாம் தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவது தொடர்பாக கூடி பரிசீலனை செய்த்தோம். அப்போது எமது கட்சியில் போட்டியிட்ட அருந்தவபாலன் 14 ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்றிருந்தார். எனினும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு மிகவும் குறைவான விருப்பு வாக்குகளே கிடைத்தது. இவ்வாறான நிலையில் நாம் எவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஆசனம் வழங்குவது. இப்படி இவர்கள் எல்லோரும் சலுகைகளுக்காகக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்கள்.

இதற்கும் அப்பால் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியில் இருக்கும்போது சுரேஷ் என்னை கடுமையாக விமர்சித்தார். இதனை ஊடகங்கள், விக்னேஸ்வரன் என்னுடன் ஓர் நிகழ்வில் இருந்தபோது கேட்டனர்.

அதற்கு அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரனுக்கு கல்வி அமைச்சு பதவி வழங்கவில்லை என்ற கோபத்திலேயே கடுமையான விமர்சனங்களை வெளியிடுகின்றார் என கூறியிருந்தார். அது ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

ஆனால் நிலைமை இப்ப என்ன? அவர்கள் இருவரும் பதவி ஆசைக்கு ஒன்றிணைந்து எம்மை விமர்சிக்கின்றனர். மக்கள் இவர்களின் உண்மை முகங்களை அறிவார்கள். தேர்தலில் தக்க பதில் வழங்குவார்கள்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் விரோத அரசியல் செய்யப்பட்டு வருகின்றது. இது ஆபத்தானது. இதை நாம் அனுமதிக்கமாட்டோம்.

கிழக்கில் அரசியல் செய்யும் கருணா, ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்றார். பிள்ளையான் ஒன்றுக்குத் தலைமை தாங்குகின்றார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என ஒன்று இயங்குகின்றது. இவையெல்லாம் எமக்கு எதிரானவை.

கருணா, பிள்ளையான் போன்றவர்கள் முஸ்லிம் விரோத அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். முஸ்லிம்களுடன் சில பிரச்சினைகள் உள்ளனதான். அவற்றை வைத்து முஸ்லிம் விரோத அரசியலை அவர்கள் இருவரும் செய்கின்றார்கள். இது மிக ஆபத்தானது.

இதைத் தொடர்ந்தால் வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது. முஸ்லிம்களை எம்மிலிருந்து அந்நியப்படுத்துவதற்காக இவர்கள் இயங்குகின்றார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது. கிழக்கு மக்களுக்கு நாம் இது குறித்து விளக்கமளிப்போம்” என்றார்.

பகிரவும்...