Main Menu

வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம்-நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்!

வவுனியா, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர்.

குறித்த பரிசோதனைத் தடுப்பு முகாமுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் 265 வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 5 பேருந்துகளில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் வவுனியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், வவுனியாவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...