Main Menu

வவுனியாவிலும் கொரோனா பரிசோதனை முகாம்: இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா?- செல்வம் எம்.பி.

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இந்த உயிர்க்கொல்லி வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமே.

எனினும் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் தடுப்பு முகாமை வடக்கு கிழக்கை மையப்படுத்தி அமைப்பதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

கடந்த வருடம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளை உடனடியாக வவுனியாவிற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பிவைத்திருந்தது. இதற்கு வவுனியா மக்கள் எதிர்ப்பைக் காட்டியபோதிலும் அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

இதேபோன்ற மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளைப் பார்க்கும்போது எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசாங்கம் செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.

இவ்வாறான முகாம்களை அம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்தாலி, தென்கொரியா, ஈரானில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்குத் திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கின்றது.

இந்நிலையில், வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத் தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...