வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றி காணிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு
வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இதுவரை அகற்றப்படாமல் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றி அக்காணிகளுக்குரிய உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்குமாறு அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படடுள்ளது.
மீள் குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் அதிகாரிகளுக்கும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு இணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதன்போது துரிதமாக கண்ணி வெடிகளை அகற்றி நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரத்தில் வடக்கு, கிழக்கு யுத்த பிரதேசங்களில் கண்ணி வெடிகளை அகற்றி காணி உரிமையாளர்களை மீள் குடியேற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய அதன் பொறுப்புக்களின் ஒரு பகுதியை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.