லெபனான் போராட்டம் எதிரொலி – சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
லெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்குள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக கடந்த 17 தேதி முதல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். போராட்டக்கார்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. நாட்டின் பல்வேறு இடங்கள் வன்முறை களமாக காட்சியளிக்கின்றன. எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் அரசுக்கு எதிராக முழங்கி வருகின்றனர். இதனால் லெபனான் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனானில் உள்ள தங்களது குடிமக்களை திரும்ப நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
லெபனானில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகமும், அமீரக வெளியுறவுத் துறையும் சேர்ந்து தங்களது குடிமக்களை திருப்பி அனுப்புவதற்காக சிறப்பு மையம் ஒன்று செயல்படுத்த உள்ளது என அமீரக தூதரக அதிகாரி சயித் சுல்தான் தெரிவித்துள்ளார்.
இதுவரை 132 சவுதி குடிமக்கள், ரபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக லெபனானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
போராட்டம் வலுப்பெற்று வருவதால் பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.