லண்டனில் உணரப்பட்ட அதிர்வு – பொலிஸார் தீவிர விசாரணை
வடக்கு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பேரிரைச்சலுடன் அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
லண்டன் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இந்த ஒலி கேட்டதாக அப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் வீடுகள் அதிர்ந்ததாக கூறியுள்ளனர்.
இதனிடையே, வடக்கு லண்டன் பகுதியில் உரத்த இரைச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக மெற்றோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இந்த ஒலி RAF விமானங்களிலிருந்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் கேம்பிரிட்ஜ், மேற்கு லண்டன் மற்றும் எசெக்ஸ் ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கும் இந்த ஒலி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக ஊடகங்களிலும் இதுகுறித்த தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஹார்ட்ஃபேர்ட்ஷையர் (Hertfordshire) தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் பேரிரைச்சல் தொடர்பான ஏராளமான அழைப்புகள் கிடைக்கப்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.