Main Menu

ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டி – அஸாத் சாலி

சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க இருக்கும் முஸ்லிம் வாக்குகளை இல்லாமலாக்கும் மஹிந்த ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தொம்பே தேர்தல் தொகுதியில் மல்வானை ஹேனலந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருந்தனர். ராஜபக்ஷ் அரசாங்கத்திலும் எமக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த அரசாங்க காலத்தில் அந்த வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு நாசத்தை ஏற்படுத்தியது மொட்டு கட்சியை சேர்ந்தவர்களாகும். இந்த அரசாங்கத்தின் மீது முஸ்லிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

இந்த தேர்தலில் முஸ்லிம் ஒருவர் போட்டியிட்டு ஒருபோதும் வெற்றிபெறமுடியாது. இதனை தெரிந்துகொண்டும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுகின்றார். 

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலே அவர் போட்டியிடுகின்றார். அதாவது சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குகளை தடுக்கவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் பல்கலைக்கழகத்தை எமது அரசாங்கத்தில் அவருக்கு தருவதாக மஹிந்த ராஜபக்ஷ் குறிப்பிட்டிருக்கின்றார். 

அத்துடன் பொதுத்தேர்தலில் அவர்களுடன் இணைக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ்வின் கொந்தராத்தையே ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டு வருகின்றார். இந்த சதித்திட்டத்தில் முஸ்லிம் ஏமாந்துவிடக்கூடாது.

பகிரவும்...