Main Menu

யாழ். மக்கள் ஆர்வம்- முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசியை நாளை முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 61 கிராம சேவகர் பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் கணிப்பிடப்பட்டதுடன் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் குறித்த கிராமங்கள் தெரிவாகியுள்ளன.

இதன்படி, அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 கிராமங்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தெரிவுசெய்யப்பட்ட குறித்த கிராம அலுவலகர் பிரிவுகளில் நாளை முதல் மேலதிகமாக 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

அத்துடன், இந்தக் கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு அந்தப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகத்தால் அதுதொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென வைத்தியர் கேதிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...