Main Menu

யாழில் அனைத்து வீடுகளும் சோதனை: நெடுந்தீவிற்கு மர்ம படகில் வந்தவர்கள் யார்?

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக ஶ்ரீலங்காப் படைகள்தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து தனித் தீவாக அமைந்துள்ள நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பவர்கள் இறங்கு துறையில் வைத்து அவரது விபரங்கள் பதியப்பட்டு அடையாள அடடை ஊடாக உறுதிப் படுத்தப்படட பின்னரே கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் நெடுந்தீவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மப் படகில் வந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளா அல்லது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களா? அல்லது கடத்தல்காரர்களா? என பல கோணங்களில் முப்படையினரும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.அவ்வாறு படகில் வந்து இறங்கியவர்கள் என சந்தேகிக்கும் நான்கு போரையும் தேடும் நடவடிக்கைகள் முப்படையின் ஊடாக இடம்பெற்று வருகின்றது.இதனால் நெடுந்தீவில் கடந்த இரு நாட்களாக பரப்பப்பன சூழ்நிலை காணப்படுகின்றது.

பகிரவும்...