Main Menu

”முஸ்லிம் மாணவிகளின் பர்தா தடை விதிப்பு அகற்றப்பட வேண்டும்”

நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில்,  பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களில்  பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தொடர்பில், கல்வி அதிகாரிகள் ஊடாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின்  கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

வருடா வருடம் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள்  ஆரம்பிக்கின்ற போது, பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தாவைக் கழற்றிவிட்டு வந்து பரீட்சை எழுதுமாறு வற்புறுத்தப்படுகின்றார்கள்.

இதனால்,  பரீட்சை எழுதுகின்ற முஸ்லிம் மாணவிகள்  பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும்  இவ்வாறு பரீட்சை நிலைய அதிகாரிகளினால் முஸ்லிம் மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். இது, முஸ்லிம் மாணவிகளுக்கு மாத்திரமல்ல, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலைக் கொடுக்கும் ஒரு செயலாகும்.

எனவே, வருடா வருடம்  தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்றி பரீட்சை எழுதவைக்கப்படுவது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கல்வி  அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அத்துடன், இது தொடர்பில் பரீட்சை ஆரம்பிக்கும் முன்பே சுற்று நிருபம் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டு, சகல வலயக் கல்வி அலுவலகம் ஊடாக பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் கட்டாயம் முறையாக அறிவுறுத்தப்படல் வேண்டும் என்றும் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினேன். 

இவ்வேண்டுகோளுக்கு அமைவாக, உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  உறுதி வழங்கினார் என, பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டினார். 

கம்பஹா மாவட்டத்தில் பூகொடை கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலய பரீட்சை நிலைய மண்டபம் உள்ளிட்ட தொம்பே, நிட்டம்புவ, நீர்கொழும்பு மற்றும் பதுளை, பண்டாரவளை போன்ற பரீட்சை நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள், கடந்த (05) திங்கட்கிழமையன்று குறித்த பரீட்சை ஆரம்பமானபோது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...