Main Menu

முதல் ரி-20: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றி!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது.

கேப் டவுணில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 58 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், சேம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும், ஜொப்ரா ஆர்சர், டொம் கர்ரன் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ஜோர்ஜ் லிண்டே மற்றும் லுங்கி ங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டப்ரைஸ் சம்ஸி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோனி பேயர்ஸ்டொவ் தெரிவுசெய்யப்பட்டார்.

பகிரவும்...