Main Menu

மீஞ்சூரில் தயாராகி வரும் அண்ணா-வி.பி.சிங்-கருணாநிதி சிலைகள்: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும் வகையில் நினைவிடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைபதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது. இங்கு கருணாநிதிக்கு 3.5 அடி உயரத்தில் வெண்கலத்தால் ஆன சிலை வைக்கப்பட உள்ளது. இதற்காக மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் உள்ள தீனதயாளன் சிற்ப கூடத்தில் கருணாநிதியின் சிலை தயாராகி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மீஞ்சூர் சென்று கருணாநிதியின் சிலை வடிவமைப்பை பார்வையிட்டார். சிலையில் சில திருத்தங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதே சிற்ப கூடத்தில் நினைவிடத்தில் வைப்பதற்காக 3.5 அடியில் அண்ணாசிலையும் தயாராகி வருகிறது. அதையும் அவர் பார்வையிட்டார். சென்னை மாநிலக் கல்லூரி முகப்பில் வைப்பதற்காக முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை 9 அடி உயரத்தில் தயாராகி வருகிறது. இதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பகிரவும்...