Main Menu

மின்னேற்றியபடி பாடல் கேட்டபோது கைத்தொலைபேசி வெடித்து இளம் பெண் உயிரிழப்பு!

கஜகஸ்தான் – பாஸ்டோப் நகரை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைத்தொலைபேசிக்கு மின்னேற்றியபடி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது மின்கலம் திடீரென வெடித்ததில் உயிரிழந்தார்.

கைத்தொலைபேசியை மின்னேற்றியபடி தலைக்கு அருகில் வைத்து பாடல் கேட்டபோது அதன் மின்கலம் சூடேறி வெடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆல்வா அசெட்கிசி (வயது 14) என்ற பாடசாலை மாணவியான இவர் இசை கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் இரவில் கைத்தொலைபேசியில் பாடல் கேட்டுக்கொண்டே உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் வழக்கம் போல இரவு நேரம் பாடல் கேட்டுக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று அவதானித்துள்ளனர்.

அப்போது, சிறுமியின் தலையணைக்கு அருகே கைத்தொலைபேசி வெடித்து சிதறி கிடந்தது. சிறுமி தலையில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடக்கிறார் என நினைத்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நள்ளிரவில் கைத்தொலைபேசியின் மின்கலம் சூடேறி வெடித்து சிதறியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆல்வா அசெட்கிசி படுக்கையிலேயே உயிரிழந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிரவும்...