Main Menu

மாவீரர், போராளி குடும்பங்களுக்கு உதவக் கூடாது – ‘இலங்கையன்’ பெயரில் வெளியான கடிதம்

மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கும் சலுகைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கடிதமொன்று தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையன்’ எனும் பெயரில் குறித்த கடிதம், இன்று (வெள்ளிக்கிழமை) தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘மன்னார் நகர சபையில் தற்போது மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றோம்.

மேலும் சிறுவர் பூங்கா உட்பட பல பொது இடங்களில் புலிகளின் தேசிய  நிறமான  சிவப்பு, மஞ்சள் பூசப்பட்டுள்ளது.

மன்னாரில் மக்கள் வங்கிக்கு பின்புறமாக தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளில் பல கடைகள் மாவீரர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயல்கள் இனியும் தொடரக் கூடாது. மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் முன்னுரிமைகள் அளிக்கப்படக்கூடாது. நிறுத்தப்பட வேண்டும். உங்களுக்குரிய அரச கடமையை மட்டும் சரியாக செய்யவும்.

உங்கள் அனைவரையும் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது’  என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவின்சன் தெரிவித்துள்ளதாவது, “மக்களுக்கான பணிகளை நாங்கள் நேர்மையாகவும் கண்ணியமாகவும் மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் எந்த வித அச்சுறுத்தல்களுக்கும் அடி பணியப் போவதில்லை.

எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இலக்கும், எமது பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...