Main Menu

மலையக மக்களின் குறைகளையும் தீர்க்க ஜனாதிபதி எம்முடன் பேச்சு வார்தை நடத்த வேண்டும்: இராதா கிருஷ்ணன்

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து எம்மையும் அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். இந்த முயற்சியின் ஊடாக தீர்வு காணப்பட்டால் நிச்சயம் அது பாராட்டக்கூடிய விடயமாக அமையும்.

மலையக தமிழர்கள் இலங்கை வந்து, அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் ஆகின்றன. எமது மக்களின் பிரச்சினைகள் ஆமை வேகத்தில்தான் தீர்க்கப்பட்டு வருகின்றன. உரிமைகள் கூட பல வருடங்களுக்கு பிறகுதான் கிடைக்கப்பெற்று வருகின்றன. எனவே, மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து எம்மையும் அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும்.

மலையக மக்களும் இலங்கையர்கள் தான் என்ற வாதம் தவறில்லை. அதற்காக மலையக தமிழர் அல்லது இந்திய வம்வாவளி தமிழர் என்ற அடையாளத்தை நாம் இழந்துவிடக்கூடாது.

இந்திய வம்வாவளி மக்களின் அடையாளமாகவே இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் இருந்தார். எனவே, அடையாளத்தை தொலைத்துவிடமுடியாது’ என கூறினார்.

பகிரவும்...