Main Menu

மட்டக்களப்பில் 35 ஆயிரம் பேர் நிர்க்கதி – பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு

நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்க பிரிவுகளில் 10,738 குடும்பங்களைச் சேர்ந்த 35,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 7 இலட்சத்து 70ஆயிரம் ரூபாய் பெறுமதியான சமைத்த உணவுகள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய் நிதியை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் கோரியுள்ளதாகவும் இந்த நிதி கிடைக்கப் பெற்றதும் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடர் மழையினால் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வெள்ள பாதிப்பினால் முருத்தானை, பிரம்படித்தீவு, சாராவெளி, முறுக்கந்தீவு, அக்குறானை, நாசியந்தீவு, புலாக்காடு, வடமுனை, ஊத்துசேனை, கட்டு முறிவு, மதுரங்கேனி குளம், பெண்டுகள்சேனை ஆகிய கிராமங்கள் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உணவுகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் கடினமான நிலைமை காணப்படுகின்ற போதிலும் இயந்திரப் படகுகள் மூலம் உணவு பொருட்களையும், ஏனைய அடிப்படை பொருட்களையும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் இம்மாவட்டத்தில் 11 இடங்களில் மக்கள் போக்குவரத்துக்கான பாதைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் உழவு இயந்திரங்கள், இயந்திரப்படகுகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று மழை குறைந்திருந்த போதிலும் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற வெள்ள நீரினால் குளங்கள் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு மத்திய மற்றும் மகாண நீர்ப்பாசன திணைக்களங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் அவதானிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...