Main Menu

மக்கள் மத்தியில் நான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை – மு.க.ஸ்டாலின்

மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

கலைமாமணி விருது பெற்ற முத்துலட்சுமி, தவில் வித்துவான் சுப்பையா உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி, மரியாதை செய்த ஸ்டாலின், தொடர்ந்து மக்களிடம் பெற்ற மனுக்களை பெட்டியில் வைத்து, சீல் வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குறைகளை 100 நாட்களில் சரி செய்வேன் எனக் கூறினார்.

அதிமுக ஆட்சியில் ஊழல் முறையில் விடப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் கமிஷன் கொடுத்து டெண்டர் தாரர்கள் ஏமாந்து விட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தாம் நடிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்றும் ஆனால் அதற்கு அவசியமோ, தேவையோ இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். ஆட்சி முடியும் காலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் விவசாயியாக நடிக்கிறார் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருமணம் ஆன ஐந்து மாதங்களில் அவசர நிலையை எதிர்த்து ஒருவருடம் சிறையில் இருந்தவன் நான் என்று கூறிய ஸ்டாலின், தியாகங்களால் ஆனது தான் ஸ்டாலினின் வரலாறு என்றும் கூறினார்.

பகிரவும்...