Main Menu

மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசாங்கம் பறிக்கக்கூடாது – சுமந்திரன் கோரிக்கை

அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்த நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற  விசேட ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” நவம்பர் மாதம் உலகெங்குமுள்ள மக்கள் போரில் மரணித்த தம் மாவீரர்களைக் நினைவேந்தும் காலம். எமது நாட்டிலும் மூன்று தசாப்த யுத்தமொன்று  நிகழ்ந்தேறியது.

வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்த தாய்மார்கள், தந்தையர்கள், சகோதர்கள் மற்றும் பிள்ளைகளைக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் தான் அவர்கள் இவர்களைக் காலம் காலமாக நினைவேந்தி வருகிறார்கள்.

ஜே.வி.பியின் தலைவர் ரோகன விஜயவீரவைத்  நினைவு கூருவதற்கு அனுமதியிருக்கிறது.  கவலைக்கிடமாக நினைவு கூரலிலும் கூட இந்த நாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. எமது தமிழ் பெற்றோர்களுக்கோ இங்கு தம் இறந்த பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை மறுக்கப்படுகிறது.

இந்த விடயத்தை நான் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் உண்டு.  கொரோனாவைக் காரணம் காட்டி பொலீசாரும், ஏனைய அதிகாரிகளும் மக்கள் துயிலும் இலங்களுக்குச் செல்வதை  இடைமறிக்கத் தயாராவதை நான் அறிகிறேன்.

அரசாங்கம் கொரோனாவைக்  காரணம் காட்டி மக்களது நினைவேந்தல் உரிமையைப் பறிக்கக் கூடாதெனக் கேட்டு நிற்கின்றேன்”, எனக் குறிப்பிட்டார்.

பகிரவும்...