Main Menu

மக்களின் குறைகளை கேட்டறிய கிராமப் புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, உடனடித் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடி விஜயம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டு, அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, அதன்மூலம் உரிய தீர்வைப் பெற்றுத்தருவதே இதன் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவு, ஜனாதிபதியின் முதலாவது நேரடி கள விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 100 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள குமாரதென்ன வித்தியாலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முதலாவது மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாத பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளின் காரணமாக, கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றமை, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஜனாதிபதியின் கிராமங்களுக்கான நேரடி விஜயம் மக்களுக்கு முன்னுரிமையளித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக செலவழிக்கப்படும் தொகை மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும், கொழும்பிலிருந்து அதிகாரிகள் கிராமங்களுக்கு செல்வதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகவே, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் பிரதேச அதிகாரிகள் மாத்திரமே ஈடுபட்டுவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், மக்கள் சந்திப்புக்கு நேரடியாக வருகைதந்து தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, தன்னிடம் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமானவரை உடனடித் தீர்வைப் பெற்றுத்தருவதே தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பின்னர் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...