Main Menu

மகாநதி ஆற்றில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

ஒடிஸாவில் மகாநதி ஆற்றில் மூழ்கியிருந்த சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான கோயிலை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த கோயில் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என இந்திய கலை,   கலாசார பாரம்பரிய அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளா் அனில் தீா் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ மகாநதி பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக  கட்டாக் மாவட்டம்,  பத்மாவதி பகுதியிலுள்ள பைதேஷ்வா் கிராமத்தின் அருகே மகாநதி ஆற்றில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி கோயில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

60 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கட்டட பாணி மற்றும் கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது  அது 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

கோயிலின் பிரதான கடவுள் கோபிநாதா் ஆவாா். பழைமை வாய்ந்த இக்கோயிலை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றி  மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி  இந்திய தொல்லியல் துறையை அணுகவுள்ளோம்.  அதற்கான தொழில்நுட்பங்கள்  இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளது.

இந்த விவகாரத்தை  தொல்லியல் துறையிடம் எடுத்துச் செல்லுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். மகாநதி பள்ளத்தாக்கு பகுதியில் இதுவரை 65 பழைமையான கோயில்கள் எங்களது குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளன. சுமாா் 800 பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...