Main Menu

போலந்து ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் உதவியாளர் பாவெல் ஸ்ரோட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்ட ஆண்ட்ரெஜ் டுடா, கடந்த மாதம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார்.

இதனிடையே ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதியானதைத்தொடர்ந்து, ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியானது.

போலந்தில் புதன்கிழமை 17,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் மற்றும் 630க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

38 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டில், 4 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் மற்றும் கிட்டத்தட்ட 99,000 இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...