Main Menu

போராட்டத்துக்கு அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற் படுவதாக உறவுகள் குற்றச்சாட்டு

சிவிலுடையில் வருகைதந்த பொலிஸார், தமது விபரங்களை பதிவு செய்ததுடன் தமது போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக மட்டக்களப்பில் நீதிகோரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், 13வது நாளாகவும் இன்றும் (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாமாங்கேஸ்ரர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் 13வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நடைபெற்று வருகின்றது.

வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் மிகுந்த மனவேதனையுடன் தமது உறவுகளை தேடி போராடிவரும் பெற்றோர்களை, இன்னும் வேதனைக்குட்படுத்தும் செயற்பாடுகளை பொலிஸார் கைவிடவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பகிரவும்...