Main Menu

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் – மைத்திரி

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மானுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி , துஷன்பேயில் உள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்தார். 

இரு தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் முறையான திட்டமொன்றின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர். 

மேலும் இருநாடுகளுக்கிடையில் முதலீட்டு மற்றும் வியாபார வாய்ப்புகளை கண்டறியும் துரித நிகழ்ச்சித்திட்டமொன்று பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. 

பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பது தொடர்பிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

பகிரவும்...