Main Menu

பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மோகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மெரினா கடற்கரையில் திட்டமிடப்பட்டு உள்ள பேனா நினைவு சின்னத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் இந்த திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக உள்ளது. பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா நினைவு சின்ன திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. எனவே பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிட வேண்டும்’ என கோரப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த மனுவுக்கு உதவிடும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் தவே வாதிட முற்பட்டபோது, நீதிபதி எஸ்.கே.கவுல், ‘இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு என்ன செய்ய முடியும்?, என்ன அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது?, மீனுக்கு எப்படி இது பொருந்தும்? தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்லுங்கள் அல்லது சென்னை ஐகோர்ட்டை நாடுங்கள். ஏன் அனைத்து விவகாரங்களையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் சில காலம் இருந்துள்ளேன். அரசியல் போராட்டத்தில் கோர்ட்டை தலையீடு செய்ய வைத்ததில்லை. அரசியல் போராட்டத்தை வேறு எங்காவது நடத்துங்கள். இந்த விவகாரம் சுற்றுச்சூழல் சார்ந்ததா? அப்படி என்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுங்கள்’ என குறிப்பிட்டார். பின்னர் வக்கீல் சித்தார்த் தவே, ‘அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளதால், சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம்’ என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘ரிட் மனு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டை அதற்கான பணியை மட்டும் செய்ய விடுங்கள். இது போன்ற மனுக்களால் முடியாத நிலை உருவாகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்வதற்கு எது தடையாக உள்ளது? மாநிலத்துக்குள்ளான பிரச்சினையை மாநிலத்தில் உள்ள ஐகோர்ட்டு முதலில் விசாரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டனர். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், ‘பேனா நினைவு சின்ன திட்டம் குறித்து நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் மனுதாரர் பங்கேற்கவில்லை. ரிட் மனுவை ஜனவரி மாதம் தாக்கல் செய்துவிட்டு ஜூலை மாதம்தான் தமிழ்நாடு அரசுக்கு அளித்தார். இது போன்றுதான் மனுதாரர் இந்த வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த வழக்கு முழுவதும் அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 6 அடி நிலம் தர மறுத்த நபர்தான் பேனா நினைவு சின்னம் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்’ என வாதிட்டார். மற்றொரு மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ‘நினைவிடம் அமைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையிலேயே அது தடை செய்யப்பட்ட பகுதி இல்லை என கூறி பேனா நினைவு சின்னத்தை எழுப்ப திட்டமிட்டு உள்ளனர். இதில் எவ்வித பொதுநலனும் அடங்கவில்லை’ என வாதிட்டார். சென்னை ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தீர்களா? என நீதிபதி எஸ்.கே.கவுல் கேட்டார். இதைத்தொடர்ந்து மனுவை திரும்ப பெற அனுமதி பெற்று அனுமதித்து தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பகிரவும்...