Main Menu

பெரும் துன்பத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்: உதவிடுமாறு அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கோரிக்கை!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை இன்னும் 3 மாதங்களுக்காவது பிற்போட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கொரோனா வைரஸ் பரவத்தொடங்க முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தாக்கத்தால் அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது அறிவிக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களால் 3 அல்லது 4 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது. இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைக்கின்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, அரசாங்கம் ஏதேனும் விதத்தில் மானிய அடிப்படையிலாவது உதவி வழங்கவேண்டும்.

அதேபோல், தோட்டப் பகுதிகளில் இருந்து கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களுக்கு தொழிலுக்குச் சென்றவர்கள், தொடர் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருமானம் இல்லை. அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தார் இங்கு தவிக்கின்றனர். எனவே, இவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடக்கப்படவில்லை. அவர்களின் துன்பம் துடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சமுர்த்திக் கொடுப்பனவில் பாகுபாடு காட்டப்படுகின்றது. சில அதிகாரிகள் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர். மாவட்ட அரச அதிபரிடம் முறையிட்டுள்ளோம். அநீதி இடம்பெறுவதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதாரங்களைக் கோரியுள்ளார். அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அவசரப்படக்கூடாது.

குறிப்பாக, தேர்தலொன்று நடத்தப்பட வேண்டுமெனில் பிரசாரம் முன்னெடுப்பதற்கான சுதந்திரம் கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு இருக்கவேண்டும். அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். ஆனால், அதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மூன்று மாதங்களுக்காவது தேர்தலை பிற்போடப்பட வேண்டும்” என்றார்.

பகிரவும்...