Main Menu

பெய்ஜிங் நகரில் கொரோனா அதிகரிப்பு – கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்தியது சீனா

கொரோனா அதிகரிப்பை அடுத்து 20 லட்சம் சீனர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. அந்த மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்நிலையில் இன்று சீனா முழுவதும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் பெய்ஜிங்கில் மட்டும் 20 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து தற்போதைய வரையிலான அதிகபட்ச கொரோனா பாதிப்பு என சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வீட்டு வளாகங்களை பூட்டுதல், எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் நீண்டகால தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 லட்சம் பேர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றன. மூடப்பட்ட அரங்குகளில் குளிர்கால ஒலிம்பி போட்டி நடத்தப்படும் நிலையில், அந்த  பகுதி முழுவதும் கடந்த 4ம் தேதி சீல் வைக்கப்பட்டு மற்ற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மூடப்பட்ட விளையாட்டு அரங்குகளுக்குள் இருக்கும் 60,000 பேர் தினசரி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பெய்ஜிங் நகரம் முழுவதும் கொரோனா தொற்றே இல்லாத நிலையை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  பெய்ஜிங் அருகே உள்ள சியோங்கான் பகுதியில் சுமார் 12 லட்சம் பேரை  வீடுகளுக்குள் அடைத்து வைத்திருப்பதை சீனா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...