Main Menu

புரிந்துணர்வுகள், தெளிவு படுத்தல்கள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம்- யாழ். பல்கலையில் அஜித் நிவாட் கப்ரால்

புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கிச் செயற்படுத்துவோம் என யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்.கலையில் கல்வி பயிலும் பதினொராயிரம் மாணவர்களில் நான்காயிரத்து 500 சிங்கள மாணவர்கள் கற்பதுடன், அவர்களுக்கும் வட பகுதி மாணவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இடம்பெறும் நிலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதோடு பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

இதன்போது அவர் கருத்துக் கூறுகையில், “கல்வியலாளர்களுடன் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய பழைய நண்பர்கள் மற்றும் ஏனைய கல்வியலாளர்களை மீளக் காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

யாழ்ப்பாண மக்களுடன் நான் நீண்ட தொடர்பினைப் பேணி வருகின்றேன். நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களின் போது யாழ். மக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளேன்.

நமது மத்திய வங்கியின் வடக்கு அலுவலகம் உட்பட ஏனைய வங்கியின் அலுவலங்கள் தொடர்பாக இங்கே பல நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

இன்றைய தினம் நான் வருகை தந்தபோது பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு விடயத்தைத் தெரியப்படுத்தினார். யாழ். பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார்கள் எனவும் அதில், நான்காயிரத்து 500 பேர் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

தென் பகுதி, வட பகுதி மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்பதன் காரணமாக சில புரிந்துணர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, இது மிகவும் முக்கியமான விடயமாகும்.

தற்போது எமது நாடானது முதலீட்டிற்கு முன்னுரிமையளித்து வருகின்றது. எமது அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தை முன்னோக்கின் கொண்டுசென்று முதலீடுகளை அதிகரிப்பதாகும்.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த முதலீட்டு செயற்பாடுகள் தொடர்பாக நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். அத்தோடு வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள், வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திலும் புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய வசதி, வாய்ப்புகள் ஏனைய பல்கலைக் கழகங்களுக்கு உள்ளதுபோன்றே, ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கிச் செயற்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

பகிரவும்...