Main Menu

புங்குடுதீவு பூசகர் கொலை: சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளிப்பு- சீ.சீ.ரீ.வி. பதிவும் மீட்பு!

புங்குடுதீவு, ஊரதீவு சிவன் கோயில் பூசகரை கொலைசெய்த குற்றச்சாட்டில் மூவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதன்போது, தாங்கள் மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம் எனவும் அதனால், அவர் மயங்கிச் சரிந்துவிட்டார் என்றும் சந்தேகநபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியிருக்கும் என்பதால் அதன் சேமிப்பகத்தை (Hard Disk) எடுத்துச் சென்று மறைத்ததாகவும் அவர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது உதவியாளர் உட்பட மூவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணொருவரை அழைத்துவந்து கலாசார சீரழிவில் ஈடுபட முற்பட்டபோது அதனை அனுமதிக்காது கண்டித்தமையைத் தொடர்ந்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, பெண் ஒருவரைக் காதலித்தமைக்காக பூசகர் தன்மைத் தாக்கினார் என்றும் இதனையடுத்தே நேற்றிரவு மது அருந்திவிட்டு பூசகரை தாம் தாக்கியதாகவும் பூசகரின் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, பூசகரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவின் சேமிப்பகம் சந்தேகநபர்களின் தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூசகரின் உடமையிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்திருந்த சந்தேகநபர்கள், யாழ். நகருக்குச் சென்று பொருட்கள் வாங்கி வரும்படி இரு பெண்களிடம் வழங்கியுள்ளனர். இதனால், குறித்த பணத்தை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளின் நிறைவில் சந்தேகநபர்கள் ஐவரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பின்னணி

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோயில் பூசகர் கொலைசெய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் ஆகியோர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். பூசகரின் தலையின் பின்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பூசகரின் உதவியாளரான கிளிநொச்சி, விசுவமடுவைச் சேர்ந்த விதுஷன் மற்றும் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...