Main Menu

புகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான் பல்கலைக்கழகம்

புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், பணியில் சேருவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவேன் என உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் யூசுகே தாகுகுரா கூறுகையில், “புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் கல்வித்துறைக்கு பொருத்தம் இல்லாதவர்கள் என்கிற முடிவுக்கு வந்துள்ளோம். நாகசாகி பல்கலைக்கழகத்தை புகைப்பிடிப்பவர்கள் இல்லாத பல்கலைக்கழகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்காக பல்கலைக்கழகத்துக்கு உள்ளே மருத்துவமனை தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.  

பகிரவும்...