Main Menu

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள் அட்டைப்பெட்டிகளைப் போல் சரிந்து விழுந்தன.

லுஸான் தீவின் போராக் நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 20-க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பிரேதங்களும் வெளியே எடுக்கப்பட்டன. இதேபோல், லுபாவ் நகரில் இடிந்து விழுந்த மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை உள்பட இருவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டதாக பம்பாங்கா மாகாண கவர்னர் லிலியா பினேடா இன்று மாலை தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் எதிரொலியாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் ஜெனரேட்டர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலநடுக்கத்தால் இங்குள்ள கிளார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இடிபாடுகளில் 7 பேர் காயமடைந்தனர். 

பகிரவும்...