Main Menu

பிலிப்பைன்ஸ்சில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று உல்லாச விடுதியொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்.

விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது.

இதையடுத்து, விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, அதனைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது குறித்த விமானம் அங்குள்ள உல்லாச விடுதியொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், வீழ்ந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள திபோலாக் நகரில் இருந்து நேற்று முன்தினம் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. எனினும் இதுகுறித்த தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

பகிரவும்...