Main Menu

பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் பங்களிப்பை நிறுத்த அமெரிக்கா முடிவு!

பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் அமெரிக்காவின் பங்களிப்பை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளார்.

இதற்கமைய ஏமனில் சவுதி இராணுவப் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவை மீளப் பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில், ‘ஏமனில் நடக்கும் போர் முடிவுக்கு வர வேண்டும். ஏமனில் நடக்கும் போருக்கு அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுகளும் திரும்பப் பெறப்படுகின்றன. இதில் ஆயுத விநியோகமும் அடங்கும்’ என கூறினார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க இராணுவம் திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...