Main Menu

பிரான்ஸ் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள G7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் கனிவான வேண்டுகோளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.

உலகத் தலைவர்கள் பங்குபெறும் 45 வது G-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் எதிர்வரும் 24-ம் திகதி முதல் 26-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

இதன்போது, அடுத்த வருடம் அமெரிக்காவில் நடைபெற உள்ள G-7 மாநாட்டில் ரஷ்யாவை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரான்ஸ் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “ரஷ்யாவை இந்த மாநாட்டில் பங்குபெறச்செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், மீண்டும் இந்த மாநாட்டை G8 மாநாடாக நடத்தவும் நான் ஆதரவளிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பெராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தந்திரமாக செயல்பட்டதால், ரஷ்யா இந்த G-8 குழு அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பதையும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பகிரவும்...