Main Menu

பிரான்ஸில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகமுள்ள நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்று பரவல் அதிகம் உள்ள லியோன் மற்றும் நீஸ் நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது. சுகாதார நடைமுறைகள், முக்கக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஒவ்வொருவரும் உணர்ந்து சமூக இடைவெளிகளை கடைபிடித்தால் மாத்திரமே இதில் இருந்து மீளலாம்.

பரிஸ் தவிர, மார்செ, போர்து, லியோன், நீஸ், துலூஸ் போன்ற நகரங்களிலும் கொரோனா உச்சகட்டமாக பரவி வருகின்றது.

இதில் லியோன் மற்றும் நீஸ் நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் எனவும் அவற்றை சனிக்கிழமை அந்நகரங்களின் முதல்வர்கள் அறிவிப்பார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழலையர் பாடசாலைகளின் ஆசியர்கள் அனைவரும் முக்ககவசம் அணிவது தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில், பத்தாயிரத்து 593பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்பட்டுள்ளனர். 50பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை நான்கு இலட்சத்து 15ஆயிரத்து 481பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 095பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...