Main Menu

பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பிரதமரின் சென்னை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது. பிரதமர் விவேகானந்தர் இல்லத்திற்கு வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ்ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம். போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்று பாதையானது மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும். மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல இரவு 8 மணி வரை இடையிடையே திசைமாற்றம் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும். * அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. * பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்சு வளைவில் திருப்பி அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும். * வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் NRT புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும். * ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். * கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பிவிடப்படும். அதிக பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...