பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – மரண தண்டனை வழங்க ஒப்புதல்!!
பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், மரண தண்டனை வழங்கும் சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் பல்வேறு சட்டமூலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில், சட்டமூலங்களில் 4, 5 மற்றும் 6ஆவது பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறைதண்டனை வழங்கும் வகையில் சட்டமூலத்தின் 14, 15ஆம் பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்றும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.