Main Menu

பாதுகாப்பு ஆலோசகராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார்.

எனினும், எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு, சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐதேக உயர்மட்டத் தலைவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தனர்.

ஆனால் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க முடியாது என்று, சிறிலங்கா அதிபர் அடியோடு நிராகரித்துள்ளார்.

எனினும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக அவரை நியமிக்கத் தயார் என்றும், தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கும் அவரை அனுமதிக்க முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஆனால், எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா விரும்பவில்லை என கூறப்படுகிறது.

எனினும், காவல்துறை திணைக்களத்தை மீண்டும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதனை சரத் பொன்சேகாவிடம் வழங்க வேண்டும் என்று ஐதேகவினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை, சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு நியமிப்பதை மூத்த காவல்துறை அதிகாரிகள் விரும்பவில்லை என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் ஐதேக தலைவர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...