Main Menu

பப்புவா சிறை சூறையாடல் – 250 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம் 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் அண்டை நாடாக இருந்த இந்தோனேசியா, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது. அதே சமயம் பப்புவா பிராந்தியத்துக்கு இந்தோனேசிய அரசு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.

எனினும் பப்புவா பிராந்தியம் இணைக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரி பிரிவினைவாத அமைப்புகள் போராட தொடங்கின. அதன்படி பல ஆண்டுகளாக பப்புவா பிராந்தியத்தில் இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனால் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா மாகாணங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன. மேலும் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வதாக இந்தோனேசியா அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இந்தோனேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்தோனேசிய தேசியக்கொடியை அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய மாணவர்களை இந்தோனேசிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பப்புவா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகர் மனோக்குவாரி, சோரோங், ஜெயபுரா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது சோரோங் நகரில் உள்ள சிறையை போராட்டக்காரர்கள் சூறையாடினர். சிறைக்காவலர்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் சிறை கட்டிடத்துக்கு தீவைத்தனர்.

இதனால் சிறைக்குள் மிகவும் பதற்றமான சூழல் உருவானது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை சிறையில் இருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். இதற்கிடையில் இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை கற்களை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டும் அவர்கள் தப்பி சென்றனர். இதில் சிறை அதிகாரிகள் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தோனேசிய நீதித்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மார்லியன் லாண்டே, “சிறையில் இருந்து 258 கைதிகள் தப்பிவிட்டனர். அவர்களில் 5 பேர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பினர்” என கூறினார்.

மக்கள் போராட்டத்தினால் ஏற்கனவே பப்புவா பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியிருப்பது போலீசாருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

பகிரவும்...