Main Menu

நீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – நஃப்டா ஒப்பந்தம் கையெழுத்தானது

சர்ச்சைக்குரிய நஃப்டா ஒப்பந்தம் தொடர்பாக நீண்டகாலமாக காணப்பட்டுவந்த முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நீடித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று நாடுகளுக்கிடையில் கடைசி நிமிட உரையாடல்கள் நடந்ததைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) மெக்சிகோவிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் நீண்ட காலத்தைக் கொண்ட கடினமாக பேச்சுவார்த்தையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள கிறிஸ்டியா ஃப்ரீலான்ட், அனைவரும் இணைந்து பணியாற்றியதன் மூலம் இதனை இறுதிக்கட்டத்துக்கு கொண்டுவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி அபிவிருத்திக்காக கடந்த 1994ஆம் ஆண்டு ‘வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (NAFTA) அமுல்படுத்தப்பட்டது.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று எனக் கூறிய அவர், தற்போதையை சூழலில் நஃப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நஃப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என ட்ரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து மூன்று நாடுகளிடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் (ஞாயிறு) கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் காலக்கெடு விதித்தார். அதன்பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்போம் என்றும் கூறினார்.

இந்த காலக்கேடுவை அடுத்து,  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதன்மூலம் வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பான கனடா மற்றும் அமெரிக்கா குழுவினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து சர்ச்சைக்குரிய நஃப்டா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...