Main Menu

நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் நிரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது.

அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்றும் குறித்த நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்மூலம் விஜய் மல்லையாவுக்கு அடுத்து இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2-ஆவது தொழிலதிபராக நிரவ் மோடி காணப்படுகின்றார்.

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி அவரது உறவினர் மெஹூல் சோக்சியுடன் இணைந்து பாஞ்சாப் நேஷன் வங்கியில் சுமார் 13,000 கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் அவரை கைதுசெய்த பிரித்தானிய பொலிஸார் சிறையில் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துவது குறித்த விசாரணைகள் லண்டன் நீதிமன்றத்தில் இடம்பெற்று  வந்தது.

குறித்த விசாரணைகளின்போது தான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன்  பிணை வழங்க இருமடங்கு பிணைத்தொகை அளிக்க தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.

பகிரவும்...