Main Menu

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதற்கு முன்னதாக 22 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த அணியில், கடந்த டெஸ்ட் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படாத அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவுக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதிர்பார்ப்பு மிக்க சுழற்பந்து வீச்சாளரான லசித் எம்புல்தெனிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும், லஹிரு குமார, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெனார்டோ ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், சிறப்பாக விளையாடிய ஒசேத பெனார்டோவும் அணியில், சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், அஞ்சலோ மெதியூஸ்;, தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, ஓசத பெர்னாண்டோ, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த இந்த இரண்டு போட்டிகளும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...