நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை : மத்திய அரசு தகவல்!
இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நித்யானந்தாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் பல நாடுகளின் தூதரகங்களையும், அரசுகளையும் நாடியுள்ளோம். நித்யானந்தா குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறோம்.
ஆனால் இது தொடர்பாக ஈகுவடார் நாட்டை தொடர்பு கொண்டபோது அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை நடத்தி வரும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.