Main Menu

நாளை பிறந்தநாள் கொண்டாட்டம்- போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள். திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள். காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி. இந்தாண்டு அவரது பிறந்த நாள் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம் பாபா திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி இருப்பதுதான், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் ரசிகர்களிடம் வெளிப்பட்டிருக்கும் ஆன்மீக சிந்தனையால் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது. இதற்கு இளம் தலைமுறையினரிடம் எழுந்திருக்கும் ஆன்மீகத் தேடல்தான் காரணம் என்று ரஜினியின் மனதில் தோன்றி இருக்கிறது. இந்த சிந்தனையால் பாபா படத்தை நவீனப்படுத்தி வெளியிட்டால் அது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நினைத்தார். அதனால் படத்தை நவீனப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசித்து அதற்கான வேலைகளில் இறங்கி இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பாபா திரைப்படம் வெளியானது. படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு வெளியாயின. ரஜினி நினைத்தது போலவே 1000 திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய வெளியீட்டுக்கு நடப்பது போலவே அதிகாலை 4 மணிக்காட்சிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ரஜினியே எதிர்பார்க்காத வகையில் மறு வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொந்த படமான பாபா படத்தின் மீது இருந்த தோல்விப்படம் என்ற கறையை நீக்கியதில் தனது ரசிகர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தன்னுடைய 73-வது பிறந்த நாளில் வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக போயஸ் தோட்ட வீட்டின் உள்ளேயே சிறிய அளவிலான மேடை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட உள்ளன. பாபா வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு ரஜினியை நாளை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

பகிரவும்...