Main Menu

நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிட வேண்டாம்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹற்றனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால், மொட்டுக் கட்சிக்கு வாக்களித்த மக்களே இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்ச்சிக்கின்றனர். பொருட்களின் விலை நாளாந்தம் உயர்வடைந்து வருகின்றது. சிலவேளை நாமும் அந்தப்பக்கம் சென்றிருந்தால் இந்நேரம் மக்களின் சாபத்துக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும்.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. ஜனாதிபதியும் இதுகுறித்து அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார்.

ஆனால், அவரின் உத்தரவைக்கூட கம்பனிகள் ஏற்பதாகத் தெரியவில்லை. மறுபுறத்தில் அடுத்தப் பேச்சுவார்த்தையில் வெற்றி நிச்சயம் என வீராப்பு பேசிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கம்பனிகளை ஒரு நிலைக்குக் கொண்டுவரமுடியும். இதனைச் செய்வதற்கு மாற்றுத் தரப்பினர் தயாராக இல்லை. சம்பள விவகாரம் தொடர்பாக எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம்.

ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கமே அறிவித்தது. எனவே, அதற்கு அழுத்தம் கொடுத்துத்தான் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிட வேண்டாம். சம்பள விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் விழிப்பாக இருந்திருக்காவிட்டால், தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டு இந்நேரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பார்கள்.

இதேவேளை, எமது ஆட்சியில் ஏழு பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீட்டை குருவிக்கூடு என விமர்சித்து, 20 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுக்கப் போவதாக சூளுரைத்தவர்கள் இப்போது 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கே நடவடிக்கை எடுத்துள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...